நாகர்கோவில், ஜூன் 18 –
கன்னியாகுமரி மாவட்டத்தின் மிக முக்கிய ரயில் நிலையமாக நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் உள்ளது. இந்த நிலையத்தில் நேற்று இரவு 10.15 மணியளவில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதே நேரத்தில் பல்வேறு ஊர்களுக்கு செல்லும் ரயிலுக்காக நூற்றுக்கணக்கான பயணிகள் நடைமேடைகளில் காத்திருந்தனர். திடீரென விளக்குகள் அணைந்ததால் ஒட்டுமொத்த ரயில் நிலைய வளாகமும் கும்மிருட்டில் மூழ்கியது.
பொதுவாக ரயில் நிலையம் போன்ற முக்கிய பொது இடங்களில் மின்தடை ஏற்படும் போது உடனடியாக தானியங்கி முறையில் ஜெனரேட்டர்கள் இயங்கி மின்சாரம் வழங்கப்படும். ஆனால் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இரவு மின்தடை ஏற்பட்டு நீண்ட நேரம் ஆகியும் ஜெனரேட்டர் இயக்கப்படவே இல்லை என்று கூறப்படுகிறது.
இதனால் பிளாட்பாரங்கள், டிக்கெட் கவுண்டர்கள் மற்றும் மேம்பாலங்கள் அனைத்து பகுதிகளிலும் இருளில் மூழ்கியது. மின்சார இல்லாமல் பிளாட்பாரங்களில் அமர்ந்து இருந்த பயணிகள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் வந்தவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பயணிகள் தங்கள் செல்போன் டார்ச் வெளிச்சத்தை வைத்துக்கொண்டு தேவையான இடங்களுக்கு சென்றனர்.
இருளை பயன்படுத்தி பயணிகளின் உடமைகளை திருடி போக வாய்ப்புள்ளதாக கருதி பலரும் அச்சத்துடன் காணப்பட்டனர். ரயில்வே பாதுகாப்பு படையினரும் இருளில் பயணிகளை கண்காணிப்பதில் சிரமத்தை எதிர்கொண்டனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து ரயில்வே ஊழியர்களிடம் கேட்டபோது அவரிடம் இருந்து முறையான பதில் எதுவும் கிடைக்கவில்லை என பயணிகள் குற்றம் சாட்டினர். கடைசியாக இரவு 11 மணியளவில் மீண்டும் மின்சாரம் சீரானது. அதன் பின்னரே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.


