தஞ்சாவூர், ஜூன் 1 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நீர் நிலைகளை தூய்மைப்படுத்தும் சவால் என்கின்ற தூய்மை இயக்கம் தொடங்கியது. தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே உள்ள கல்லணை கால் வாயில் இந்த இயக்கத்தை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள குளங்கள், ஏரிகள், ஆறுகள், கால்வாய்கள், நீர் வழி தடங்கள், கடல் கரை பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு நீர் நிலைகளில் தேங்கியுள்ள நெகிழி கழிவுகள் குப்பைகளை அகற்றி நீர்நிலைகளின் இயற்கை சூழல் மீட்டெடுப்பதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம்.
இதன் அடிப்படையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள நீர் நிலைகளில் உள்ளாட்சி அமைப்புகள் தன்னார்வ அமைப்புகள், பொதுமக்கள் இணைந்து தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் கல்லணை கால்வாயில் நடைபெற்ற தூய்மை பணியில் மாநகராட்சி, பேரூராட்சி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த 500க்கும் அதிகமான தூய்மை பணியாளர்கள் பங்கேற்று தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.
நீர்நிலைகளில் நெகிழி பொருள்கள் மற்றும் குப்பைகளை கொட்டுவதை பொதுமக்கள் முழுமையாக தவிர்க்க வேண்டும். பெரிய கோவில் அருகே உள்ள கல்லணை கால்வாயில் குளித்துவிட்டு துணிகள் மற்றும் பிற கழிவுகளை வீசுவதை முற்றிலும் நிறுத்த வேண்டும். மேலும் நீர் நிலைகளை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு. தூய்மையான மற்றும் நிலையான சுற்றுச்சூழலை உருவாக்க பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார் கலெக்டர்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் விஜய் சரவணன், மாநகராட்சி ஆணையர் கண்ணன், மாவட்ட சுற்றுலா அலுவலர் வரதராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



