ஈரோடு, ஜூன் 16 –
ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஈரோடு மாநகராட்சி திமுக மண்டல தலைவர் சசிகுமார் தலைமையில் ஏராளமான பேர் கலெக்டர் கந்தசாமியிடம் ஒரு மனு கொடுத்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: ஈரோடு பெரும் பள்ளம் ஓடை பகுதி யில் வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஒதுக்கப்பட்டு உள்ள ஒதுக்கீட்டாளர்கள் தங்களது பெற்றோர் மற்றும் உறவு முறை சான்றிதழ்கள் வாங்குவதில் கால தாமதமும் சிரமமும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வருகிற 19ந் தேதிக்குள் இந்த வீடுகள் ஒதுக்கீடு செய்வதற்கு கால அவகாசம் கொடுத்து உள்ளது. இந்த கால கட்டத்துக்குள் 30 க்கும் மேற்பட்டவர்கள் உரிய சான்றிதழ் பெற முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனால் இந்த ஒதுக்கீடு ரத்து செய்யும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே இந்த 30 க்கும் மேற்பட்டவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்வதற்கு கால அவகாசம் கொடுத்து அவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



