ஈரோடு, ஜூன் 16 –
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் யுவராஜா. ஈரோட்டை சேர்ந்த இவர் தமாகா இளைஞர் அணி பொது செயலாளர் பதவியில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக கட்சியின் தலைவர் ஜி கே வாசனுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
இவர் இதுவரை ஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு தொகுதியில் 2 முறையும் மொத்தம் 3 தடவை தேர்தலில் போட்டியிட்டு 3 தடவையும் தோல்வியை தழுவினார். இந்த முறை ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்டு 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
யுவராஜா கடந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் அப்போதே இவர் அதிமுகவில் சேரப்போவதாக பரவலாக பேச்சு அடிபட்டது. பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சமாதானம் செய்ததால் அந்த முடிவை கைவிட்டு தமாகாவில் தொடர்ந்து பணியாற்றியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட யுவராஜா வாய்ப்பு கேட்டு இருந்தார். இதையொட்டி அவர் கிழக்கு தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொது மக்களுக்கு வழங்கினார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி கிழக்கு தொகுதி ஒதுக்கப்படாமல் மேற்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. இதனால் வேறு வழியின்றி மேற்கு தொகுதியில் போட்டியிட்டார். அப்போதே கட்சி தலைமை மீது அவருக்கு அதிருப்தி ஏற்பட்டது.
இந்த நிலையில் இப்போது மேற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய யுவராஜா தமாகா உறுப்பினர் மற்றும் கட்சிப் பதிவியிலிருந்தும் விலகுவதாக கூறி இருப்பது கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அவர் தவெகவில் இணைய உள்ளதாகவும் பரபரப்பாக பேச்சு அடிபடுகிறது.



