திருப்பத்தூர், ஜூன் 15 –
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட செவ்வாத்தூர் புதூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் பல ஆண்டுகளாக சாலை அமைக்காமல் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பல முறை அப்பகுதியின் சமூக ஆர்வலர் மூர்த்தி அப்போது இருந்த மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த நிலையில், உடனடியாக தீர்வு கண்டு சாலை வசதி செய்து தருவதாக உறுதி அளித்திருந்தார்.
கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலரும் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று சாலை அமைக்க அளவீடு செய்த நிலையில் தற்போது வரை அந்த சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. அதோடு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் சாலை அமைத்ததாகவும் இது வரையிலும் யாரும் கண்டுக்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மேலும் மழைக்காலங்களில் குண்டும் குழியுமாக உள்ள அந்த சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கிறது. சமூக ஆரவலர் மூர்த்தி என்பவர் அளித்த மனுவிற்கு மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். மேலும் சமூக ஆர்வலர் ஏற்கனவே அப்பகுதியில் வாழும் மக்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், சுடுகாட்டிற்கு இடம், நியாய விலைக் கடை வருவதற்கு இவரது பங்களிப்பு இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



