தஞ்சாவூர், ஜூலை 16 –
தஞ்சாவூர் அடுத்துள்ள வல்லத்தில் ரூபாய் 1.20 கோடியில் கட்டப்பட்டு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காணொளி மூலம் திறந்து வைத்தார். வல்லத்தில் 2023-24 ஆம் ஆண்டு 15வது நிதி குழு மானியம் பொது சுகாதார மானிய திட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ரூபாய் 1.20 கோடியில் கட்டப்பட்டது.
இதில் கருப்பை வாய் பரிசோதனை மையம், ஊசி போடும் அறை, மருத்துவ அலுவலர் அறை, உள் நோயாளிகளின் ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, தொற்றா நோய் பிரிவு, ஸ்கேன் அறை, செவிலியர் அறை ஆகியவை உள்ளன. இதை சென்னையிலிருந்து காணொளி மூலமாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் திறந்து வைத்தார்.
இதையொட்டி வல்லம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரேவதி, மக்களவை உறுப்பினர் முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினர் விஜய் சரவணன், வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாண சுந்தரம் ஆகியோர் குத்து விளக்கேற்றி நிலையத்தை பார்வையிட்டனர்.
நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலக கலைவாணி, வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் சுகப்பிரியா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிங்காரவேல், மருத்துவர்கள் அபிராமி, வெங்கடே ஸ்வரன், கண் மருத்துவ உதவி அலுவலர் அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



