மதுரை, ஜூலை 13 –
தமிழ் மொழி வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு, மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை நிறுவி தமிழ் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பு செய்த வள்ளல் பொன் பாண்டித்துரை தேவர் அவர்களின் முழுமையான பெயர் மதுரை கரிமேடு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு சூட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
தற்போது அந்தப் பள்ளிக்கு “வள்ளல் பொன் சேதுபதி பாண்டித்துரை” என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளதாகவும், அது வரலாற்று ரீதியாக முழுமையற்ற பெயராக இருப்பதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வள்ளல் அவர்களின் சரியான மற்றும் முழுமையான பெயர் “வள்ளல் பொன் பாண்டித்துரை தேவர்” என்பதால், தமிழுக்கும் தமிழ் மரபுக்கும் அவர் ஆற்றிய மகத்தான பணியை வருங்கால தலைமுறையினர் அறிந்து போற்றும் வகையில், தமிழக அரசும் மதுரை மாநகராட்சி நிர்வாகமும் உடனடியாக பள்ளியின் பெயரை “வள்ளல் பொன் பாண்டித்துரை தேவர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி” என முழுமையாக மாற்றி அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு, அனைத்து கள்ளர் கூட்டமைப்பு, மூவேந்தர் முன்னணி கழகம் மற்றும் முக்குலத்தோர் வாழ்வுரிமைக் கட்சி ஆகிய அமைப்புகளின் சார்பில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அனைத்து கள்ளர் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஒ. வை. தியாகராஜன் தலைமையில், நாகராஜ், பூவை ஜெயக்குமார், எம்.சி. சேகர், ராமச்சந்திரன், நல்லபெருமாள், இளையராஜா பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



