தருமபுரி, ஜூன் 15 –
தருமபுரி மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியில் நடைபெற்ற சாதனைகள் விளக்க கூட்டம் மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில துணைத் தலைவர் வெங்கடேசன் கலந்து கொண்டு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது: பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி பொறுப்பேற்று 12 வருடங்களை நிறைவு செய்திருக்கிறார். இந்தியாவில் நேரு, இந்திரா காந்தியை விட 4,400 நாட்கள் அதிகபடியாக ஆட்சி செய்து சாதனை படைத்து மிகப் பெரும் வல்லமை மிக்க பிரதமராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். முக்கியமாக சமூக நீதி துறையில் அதிக சாதனை படைத்துள்ளார். இதுவரை இல்லாத அளவிற்க்கு சமூக நீதி துறையில் தலித் சமுகத்தில் யாரும் வழங்காத கேபினட் உட்பட 12 பேருக்கு அமைச்சர்களாக பதவி வழங்கி உள்ளார்.
இதற்கு முன் இருந்த காங்கிரஸ் ஆட்சியில் தலித் மக்களுக்கும், பழங்குடி இன மக்களுக்கும் எந்த அரசியல் அதிகாரமும் வழங்கவில்லை. சட்டத்துறையில் அம்பேத்கருக்கு அடுத்து பழங்குடியின சமூகத்திற்கு சட்ட அமைச்சராக வாய்ப்பு வழங்கியவர் மோடி. அம்பேத்கர் பிறந்த இடத்தை நினைவு சின்னமாக மாற்றி அம்பேத்காருக்கு புகழை சேர்த்தவர் மோடி. பெண்கள் சமூக ரீதியாக பின்தங்கி இருந்தார்கள். அவர்களும், அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என எண்ணி பெண்களுக்காக 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி உள்ளார். அது விரைவில் சட்டமாக வரும்,
கிராமப்புற மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க ஜல்ஜீவன் திட்டத்தையும், விறகு அடுப்பில் கஷ்டப்பட்ட தாய்மார்களின் துயரத்தை போக்க உஜ்வால திட்டத்தின் மூலம் இலவச கேஸ் சிலிண்டர் வழங்கியவர் மோடி. இது போன்ற எண்ணற்ற திட்டங்களை வழங்கியவர் மோடி என தெரிவித்தார்.



