நாகர்கோவில், ஜன. 21 –
குமரி மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க “சிவாலய ஓட்டம்” வரும் பிப்ரவரி 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், சாலைப் பாதுகாப்பு மற்றும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கக் கோரி குமரி மாவட் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மனுவில் கூறப்பட்டுள்ள முக்கிய கோரிக்கைகள் :
பல மாநிலங்களில் மஹா சிவராத்திரிக்கு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. அதுபோல, குமரி மாவட்டத்தில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்கும் இந்த மாபெரும் நிகழ்வைக் கருத்தில் கொண்டு, மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும். சிவாலய ஓட்டம் நடைபெறும் 110 கி.மீ பாதையில் பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாகச் சீரமைக்க வேண்டும். விபத்துகளைத் தவிர்க்க ஓட்டப் பாதைகளில் கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்க வேண்டும். முக்கிய சந்திப்புகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, இரவு நேரங்களில் போலீஸ் ரோந்து பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.
12 சிவாலயங்களிலும் தூய்மையான குடிநீர், கழிவறை வசதிகள் மற்றும் மின்விளக்கு வசதிகளை இந்து சமய அறநிலையத் துறை போர்க்கால அடிப்படையில் செய்து தர வேண்டும். லட்சக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசுவ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
இந்த மனு அளிக்கும் நிகழ்வில் விசுவ ஹிந்து பரிஷத் கோட்ட இணைச் செயலாளர் ராஜேஷ் குமார், மாவட்ட தலைவர் பத்மகுமார், மாவட்ட துணைத் தலைவர் மு. பிரதீப், மாவட்டச் செயலாளர் சக்தி நாராயணன், மாவட்ட இணைச் செயலாளர் ரமேஷ் மற்றும் மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


