தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மகாத்மா காந்தி அவர்களின் நினைவு நாளை உலக தொழுநோய் எதிர்ப்பு தினமாக அனுசரிப்பதை முன்னிட்டு, “ஸ்பர்ஷ்“ தொழுநோய் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி கொடியசைத்து தொடங்கிவைத்து, உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டார்கள். ஜனவரி 30-ம் தேதி அண்ணல் காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, உலக தொழுநோய் எதிர்ப்பு தினம் இருவார விழாவாக (30.01.2025 முதல் 15.02.2025 வரை) மாவட்டம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதன் முக்கிய நிகழ்வாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ஒன்றிணைவோம்! தொழுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்! தவறான புரிதல் அகற்றுவோம்! நோய் பாதிப்புள்ளோர் அனைவரையும் குணப்படுத்துவோம்! என்ற நோக்குடன் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், தொழுநோய் ஒழிப்பு பணியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டுச் சான்றுகள் வழங்கினார். இப்பேரணியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரியின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளார். பேரணியில் தொழுநோய் விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியானது தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி இலக்கியம்பட்டி கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி வளாகத்தில் நிறைவு பெற்றது. இந்நிகழ்வுகளின் போது அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அமுதவல்லி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் சாந்தி, மாவட்ட சுகாதார அலுவலர் ஜெயந்தி, துணை இயக்குநர் (தொழுநோய்) புவனேஷ்வரி, மருத்துவர்கள், கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.



