களியக்காவிளை, நவ. 18 –
செங்கல் ஸ்ரீ சிவபார்வதி கோயிலில் ஐயப்ப பக்தர் தங்கி ஓய்வு எடுப்பதற்கான முகாம் சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி சுவாமிகள் திருவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார்.
களியக்காவிளை அருகே உதியன்குளம்கரை செங்கல் ஊராட்சிக்குட்பட்ட மகேஸ்வரத்தில் சிவ பார்வதி கோயில் உள்ளது. இந்த கோயிலில் உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம், வைகுண்டம், தேவலோகம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் முதல் நாள் சபரி மலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஓய்வு எடுத்து செல்ல வசதியாக முகாம் அமைக்கப்படும்.
ஒரு மண்டல காலம் இந்த முகாம் செயல்படும். சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்கி ஓய்வு எடுத்துச் செல்வர். இந்த ஆண்டும் அதே போன்ற வசதிகளுடன் முகாம் தயார் செய்யப்பட்டு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த முகாம் துவக்க விழா நிகழ்ச்சியில் கோயில் நிர்வாகி குமார் தலைமை வகித்தார். சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி திருவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார். இதில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள், கோயில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



