விளாத்திகுளம், மே 19 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அம்பாள் நகர் பகுதியில் உள்ள கண்மாய் அப்பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. மேலும் 18 கிராம மக்களும் இந்த நீர்ப்பாசன கண்மாய் தான் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கண்மாயில் கடந்த சில தினங்களாக அங்கு இருந்த மீன்கள் திடீரென செத்து மிதக்க தொடங்கியுள்ளன. நாளுக்கு நாள் மீன்கள் அதிக அளவில் செத்து மிதக்க தொடங்கியுள்ளது. தண்ணீர் மாசுப்பட்டுள்ளது மட்டுமின்றி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பொது மக்கள் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அதிக துர்நாற்றம் வீசி வருவதால் அப்பகுதி வழியாக செல்பவர்கள் மற்றும் அப்பகுதியில் குடியிறுப்பவர்கள் மிகவும் அவதிப்படும் நிலை உள்ளது.
மேலும் கண்மாயில் அருகே மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், விளாத்திகுளம் சட்டமன்ற அலுவலகமும், பூங்கா மற்றும் பேரூராட்சி 500 மீட்டர் அருகில் இருக்கின்றன. ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் மௌனம் காத்து வருகின்றனர்.
மக்கள் மற்றும் விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய கண்மாய் பகுதியில் மீன்கள் தொடர்ந்து செத்துக் கொண்டிருக்கின்றன. செத்துப்போன மீன்களை அகற்றாமலும், மீன்கள் இறந்ததற்கான காரணத்தை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்காமல் அரசு அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவது இந்த ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுவதாக தமிழக வெற்றி கழகத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர்.



