நாகர்கோவில், ஜூன் 13 –
விளவங்கோடு வட்டம் நல்லூர் கிராமத்திற்கு உட்பட்ட சிராயன்குழி பகுதியில் நீர்வளத் துறைக்கு சொந்தமான பம்மக்குளம் என்ற குளம் உள்ளது. இந்த குளத்தில் பேச்சிப்பாறை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பட்டணங்கால் கால்வாய் மூலம் தண்ணீர் பெறப்பட்டு பாசனத்திற்காக அப்பகுதி விவசாய நிலங்களுக்கு பயன்பட்டு வருகிறது.
மேலும் கடுமையான வறட்சி காலங்களில் கூட குளத்தில் தண்ணீர் வற்றாமல் உள்ள நிலையில் அப்பகுதி மக்களின் அன்றாட தேவைகளுக்கும் கால்நடைகளுக்கும் அந்தக் குளத்தின் தண்ணீர் பயன்பட்டு வந்தது. அந்தக் குளத்தின் தண்ணீரை குளிப்பதற்காக அப்பகுதி மக்களும் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் நீர்வளத் துறைக்கு சொந்தமான மேற்படி குளத்தில் சுமார் 30 அடி அகலத்தில் 50 அடி உயரமுள்ள கரை பகுதியை ஜேசிபி உட்பட கனரக எந்திரங்கள் மூலம் முழுமையாக கரையை உடைத்து சேதப்படுத்தி தண்ணீரை முழுவதும் வெளியேற்றி உள்ளனர். இதனால் குளத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்ட நிலையில் அப்பகுதியில் வாழை விவசாயத்திற்கு கூட தண்ணீர் இல்லாமல் விவசாய நிலங்கள் வறண்டு போகும் நிலையை ஏற்படுத்தி உள்ளனர்.
ஆகவே நீர்வளத் துறைக்கு சொந்தமான மேற்படி பம்மகுளத்தின் கரை பகுதியை முழுவதுமாக உடைத்து சேதப்படுத்தி தண்ணீரை வெளியேற்றி அரசுக்கு பல லட்சங்கள் இழப்பு ஏற்படுத்திய சட்டவிரோத கும்பல்கள் மீது நடவடிக்கை எடுத்து சேதப் பகுதிக்கான இழப்பீட்டை ஈடுகட்ட வேண்டும் என்பதோடு குளத்தின் கரையை உடனடியாக சீரமைத்து அப்பகுதி விவசாய நிலங்களை பாதுகாக்க உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



