ஈரோடு, ஜூன் 12 –
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரச்சலூர், பத்தயம்பாளையம், வடுகப்பட்டி, ஈஞ்சம்பள்ளி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார்.
அரச்சலூர் பேரூராட்சி மற்றும், பத்தயம்பாளையம் பகுதியில் குளம் தூர்வாரப்பட்டுள்ளதை பார்வையிட்டு குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கன்றுகள் நடவும், பசுமையான செடி, கொடிகள் வளர்க்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் சி.எஸ்.ஐ. நிதியுதவி துவக்கப்பள்ளியில் காலை உணவுத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவ, மாணவியர்கள் விபரம், உணவுப்பட்டியல் விபரம், உணவின் சுவை, தரம் மற்றும் பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்தும், குழந்தைகளின் கற்றல் திறன் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
அரச்சலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், மருந்து இருப்பு மற்றும் கழிப்பறை, படுக்கை வசதி, மருத்துவ பயனாளர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை குறித்து ஆய்வு மேற்கொண்டார். அரச்சலுார் பேரூராட்சியில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.48 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வாரச்சந்தையின் கட்டுமானப்பணிகளை பார்வையிட்டு, மேலும் கழிப்பிடம், குடிநீர், போன்ற அடிப்படை வசதிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, வடுகப்பட்டி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ். செயல்பட்டு வரும், உரப்பூங்காவிற்கு சுற்றுச்சுவர் அமைக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து வடுகப்பட்டியில், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.12.10 கோடி மதிப்பீட்டில் 176 குடியிருப்புகளுக்கு மேற்கூரை அமைக்கப்பட்டு வரும் பணிகள் மற்றும் ஈஞ்சம்பள்ளியில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 144 குடியிருப்புகளுக்கு வண்ணம் பூசப்பட்டு வரும் பணியினையும் என மொத்தம் ரூ.22 கோடி மதிப்பீட்டில் 320 குடியிருப்புகளை பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றம், கட்டுமானப்பொருட்களின் தரம் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய இதரப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
ஈஞ்சம்பள்ளி மகளிர் சுய உதவிக்குழுவினர்கள் பாரம்பரிய முறையில் களிமண்ணை பதப்படுத்தி மண்பாண்டங்கள் மற்றும் கைவினைப் பொருட்களை தயாரிக்கும் முறை குறித்து பார்வையிட்டு குழுவினர்களிடம் கலந்துரையாடினார்.



