கன்னியாகுமரி, மார்ச் 12 –
கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான என். தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு சி.எஸ்.ஆர் நிதி குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதை கண்டித்துள்ளார்.
பால்குளம் பகுதி மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் தாம் பெற்றுத் தந்த சி.எஸ்.ஆர் நிதி குறித்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மரிய ஜெனிபர் மேடைகளில் தவறாக பேசி வருவதாகவும், சி.எஸ்.ஆர் நிதி என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவில் 2013 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் படி, குறிப்பிட்ட லாபம் ஈட்டும் நிறுவனங்கள் தங்கள் நிகர லாபத்தில் 2 சதவீதத்தை கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட சமூக மேம்பாட்டு பணிகளுக்காக செலவிட வேண்டும் என்பது சட்டப் பொறுப்பு என அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் மட்டுமே தொகுதி மேம்பாட்டு நிதியாக வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் நலனுக்காக கூடுதல் திட்டங்களை செயல்படுத்த, எம்.பி., எம்.எல்.ஏ. போன்ற மக்கள் பிரதிநிதிகள் பல நிறுவனங்களிடமிருந்து சி.எஸ்.ஆர் நிதியை பெற்றுத் தருவது வழக்கமான நடைமுறையாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
பொதுமக்களுக்கு சி.எஸ்.ஆர் நிதி மூலம் செய்யக்கூடிய இது போன்ற திட்டங்களை உங்களுக்கு பாராட்ட மனம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் கொச்சைப் படுத்தக்கூடாது என அவர் தெரிவித்தார்.
2019–2020 ஆம் ஆண்டில் கன்னியாகுமரி தொகுதியின் கீழ் வரும் இரவிபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்காக தூத்துக்குடி துறைமுகக் கழகம் மூலம் 26 லட்சம் ரூபாய் சி.எஸ்.ஆர் நிதி பெற்றுத் தரப்பட்டது என்றும், இதற்கு தற்போது மதுரை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றும் பெண் நீதிபதி ஒருவர் முக்கிய உதவி செய்ததாகவும் அவர் நினைவு கூர்ந்தார்.
மேடை கிடைத்தது என்பதற்காக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்காமல், பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய நலன்களை தடுக்காதீர்கள் எனவும் என். தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.


