நாகர்கோவில், ஜன. 23 –
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் கோபகுமார் நாகர்கோவில் மங்களுர் மற்றும் திருவனந்தபுரம் தாம்பரம் (நாகர்கோவில் வழியாக) ஆகிய இரு வாராந்திர அம்ரித் பாரத் அதிவேக ரயில்கள் இயக்கத்தை பிரதமர் கொடியசைத்து துவக்கி வைப்பதற்கு நன்றி தெரிவித்தும், இரண்டு ரயில்களுக்கும் குமரி மாவட்டத்தின் இரணியல் ரயில் நிறுத்தத்தில் நின்று செல்ல அனுமதி வழங்க மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு கோரிக்கை விடுத்தும் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- குமரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் நாகர்கோவில் மங்களுர் மற்றும் திருவனந்தபுரம் தாம்பரம் (நாகர்கோவில் வழியாக) ஆகிய இரு வாராந்திர அம்ரித் பாரத் அதிவேக ரயில்கள் இயக்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கி இன்று 23.01.2026 திருவனந்தபுரத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து துவக்கி வைப்பது பெரும் மகழ்ச்சியை தருவதோடு பாரத பிரதமருக்கும், ரயில்வே அமைச்சருக்கும் குமரி மாவட்ட மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் இந்த இரண்டு ரயில்களுக்கும் குமரி மாவட்டத்தின் மைய்யப்பகுதியில் உள்ள இரணியல் ரயில் நிறுத்தத்தில் நின்று செல்ல அனுமதி வழங்கப்படாமல் உள்ளது. இரணியல் ரயில் நிலையம் குமரி மாவட்டத்தின் மைய்யப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கிருந்து தினசரி ஏராளமான பயணிகள் வெளியூர்களுக்கு செல்ல ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். இரணியல் ரயில் நிலையத்தின் அருகில்தான் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், பத்மநாபபுரம் அரண்மனை, முட்டம் கடற்கரை கலங்கரைவிளக்கம் மற்றும் குளச்சல் போன்ற சுற்றுலாத்தலங்களும் மற்றும் நகர, கிராமங்களில் உள்ள மக்கள் படிப்பு மற்றும் தொழில் விசயமாகவும் அதிகமாக ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். எனவே குமரி மாவட்டத்தின் மைய்யப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் இரு ரயில்களும் இரணியல் ரயில் நிறுத்தத்தில் நின்றுசெல்ல அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



