நாகர்கோவில், ஜூலை 20 –
நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் மக்கள் தொகை சுயகணக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக முகப்பில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் எம்.வேலுமணி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா, உதவி ஆட்சியர் பயிற்சி ர.மோனிகா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து இராட்சத வண்ண பலூணை பறக்கவிட்டு கலெக்டர் பிரதாப் தெரிவிக்கையில்: இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பான “சென்சஸ் 2027“ஐ முழுவதுமாக டிஜிட்டல் முறையில் நடத்த தயாராகி வருகிறது. நாடு முழுவதும் நடத்தப்படும் இந்த சர்வே வாயிலாக மக்கள் தொகை குறித்த புள்ளிவிவரங்களை முழுமையாக அறிய முடியும். இந்த சர்வேயின் முக்கிய அம்சம் சுயக்கணக்கெடுப்பாகும். பொதுமக்கள் அனைவரும் தங்களது சுயகணக்கெடுப்பு விவரங்களை துல்லியமாகவும், விடுபடாமலும் பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்ஒருபகுதியாக இன்று நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் இராட்சச வண்ண பலூண்ணை பறக்கவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில், சுய கணக்கெடுப்பு காலம் ஜூலை 17-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை மேற்கொள்ளப்படும். இந்த கணக்கெடுப்பில் பங்கேற்று, குறிப்பிட்ட காலத்திற்குள் (31.07.2026) சுய கணக்கெடுப்பை நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். கணக்கெடுப்பு படிவத்தில் 33 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். தனிநபர் பாதிக்க கூடிய எந்தவொரு தகலும் இடம்பெறாது.
சுயகணக்கெடுப்பு என்பது நாட்டின் மற்றும் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் ஒரு முக்கியப் பணியாகும். சரியான கணக்கெடுப்புத் தரவுகளின் அடிப்படையிலேயே எதிர்கால நலத்திட்டங்களும், உள்கட்டமைப்பு வசதிகளும் திட்டமிடப்படுகின்றன. எனவே, நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் தங்களது விவரங்களை விடுபடாமல் பதிவு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.
அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் வண்ணப்பலூண்களை பறக்கவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் நான் சுயகணக்கெடுப்பை மேற்கொள்வேன் என்ற கையெழுத்து இயக்கத்தினை துவக்கி வைத்து கையெழுத்திட்டார்கள்.
நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் எஸ்.காளீஸ்வரி (பொது), நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்வேல்முருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந்தூர் ராஜன், தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



