தஞ்சாவூர், ஜூன் 11 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் ஓட்டுநர்கள் உள்பட 8 பேர் கொண்ட இரு அணிகள் நியமிக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிரான பாலியல் உள்ளிட்ட வன்கொடுமைகளை தடுப்பதற்காக தமிழகத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை சென்னையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்.
இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பிரிவிற்கு ஒரு காவல் உதவி ஆய்வாளர், 2 காவலர்கள், 1 ஓட்டுநர் வீதம் என இரு பிரிவுகளுக்கு மொத்தம் 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு பிரிவு காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பணியில் ஈடுபடுவர்.
இந்த அணியினர் மாவட்ட முழுவதும் ரோந்து பணி செய்வது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்வதாக தகவல் கிடைத்தவுடன் நிகழ்வு இடத்திற்கு விரைந்து செல்வது போன்ற பணிகள் மேற்கொள்வர். மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்காணித்து தடுப்பது ஏற்கெனவே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்த இடங்கள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத பகுதி என கண்டறியப்பட்ட இடங்களில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பணிகளில் ஈடுபடுவர்.
இது தொடர்பாக 8 பேரும் சென்னையில் ஒரு வாரம் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு தஞ்சாவூருக்கு திரும்பினர். இவர்களுக்கு மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனம் வாழ்த்து தெரிவித்தார். அப்போது வல்லம் காவல் துணை கண்காணிப்பாளர் காயத்ரி உடன் இருந்தார்.



