சுசீந்திரம், அக். 28 –
சுசீந்திரம் அருகே உள்ள தேரூர் பேரூராட்சியில் தலைவர் பதவி ஆதிதிராவிடருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி தேரூர் அருகே உள்ள குலசேகரன்புதுரை சார்ந்த அமுதா ராணி என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்தவர் அல்ல என தேருர் பேரூராட்சி எட்டாவது வார்டு கவுன்சிலர் ஐயப்பன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர் ஆதிதிராவிடர் அல்ல. எனவே அவரது தலைவர் பதவி செல்லாது என உத்தரவு பிறப்பித்து இருந்தது. பின்பு அமுதா ராணி சுப்ரீம் கோர்ட்டில் தடை ஆணை பெற்று உள்ளார்.
அதன் அடிப்படையில் தனக்கு மீண்டும் தலைவர் பதவி வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவை வைத்து கடிதங்கள் கொடுத்து வந்துள்ளார். ஆனால் இதுவரைக்கும் அவருக்கு எந்த அதிகாரியும் உத்தரவு வழங்கவில்லை. இதனால் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தேரூர் பேரூராட்சியில் அதிமுக பிரமுகர்களுடன் தலைவர் இருக்கையில் அமர்ந்தார். அதன்பின்பும் எந்த உத்தரமும் அவர்களுக்கு வழங்கப்படாததால் இன்று காலை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவரை கண்டித்து தேரூர் பேரூராட்சி அருகே காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.



