மார்த்தாண்டம், ஜூன் 10 –
குழித்துறை பட்டணங்கால் பாசனப்பிரிவு உதவிப்பொறியாளர் கட்டுப்பாட்டிலுள்ள பட்டணங்கால்வாயின் பிரதான கால்வாய் சாமியார்மடம் அருகே கஞ்சிமடம் கோவில் எதிர் பகுதி வழியாக செல்கிறது. இந்த கால்வாயின் மேற்பகுதியில் அரசு பள்ளிகூடம் ஒன்று உள்ளது. தற்போது இந்த பள்ளி சுற்று சுவர் கட்டுவதற்காக பட்டணங்கால்வாயின் மேல்கரையை இடித்து கால்வாய்க்குள்ளே போட்டு ஹிட்டாச்சி மூலம் வேலை செய்து வருகிறார்கள்.
இன்னும் சில தினங்களில் பட்டணங்கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் எடுக்க வேண்டிய நிலையில், சானலின் குறுக்கே மண் கொட்டப்பட்டுள்ளதால் தண்ணீர் செல்ல தடை ஏற்பட்டுள்ளது. இந்த கால்வாய் மூலம் கடைவரம்பு வரை விவசாயம் நடைபெற்றுவருகிறது. கால்வாயில் மண் நிரப்பியதால் பிரதான கால்வாய் மட்டும் 70 கிலோ மீட்டர் நீளமுடையதுமான பட்டணம் சானலில் தண்ணீர் விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு பள்ளிக்கூடத்தின் பின்பக்க காம்பவுண்டு சுவரை கோடை காலத்தில் கட்டாமல் விவசாயம் நடைபெறும் இவ்வேளையில் வேண்டுமென்றே மேற்கொள்வதாக தெரிகிறது. மேலும் பள்ளிக்கூடத்திற்கு காம்பவுண்டுசுவர் கட்டும்போது, உரிய ஆழத்தில் தோண்டி பவுண்டேஷன் போடாமல் பட்டணங்கால்வாயின் பக்கச்சுவர்மீதே வைத்து கட்டினால் எதிர்காலத்தில் அதுவும் இடிந்து மீண்டும் சானலுக்குள் விழ வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



