நாகர்கோவில் ஜூன் 11
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து சில நாட்களாக இரவு முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் பகலில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதோடு சாரல் மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது. இதனால் 48-அடி கொள்ளவு கொண்ட பேச்சிப்பாறை அணை அபாய அளவை தாண்டிய நிலையில் பேச்சிப்பாறை அணையில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோதையாறு தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோதை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டி வருகிறது. எனவே இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.