கிருஷ்ணகிரி, மே 30 –
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நிறைவடையும் தருவாயில், மீண்டும் பள்ளியானது ஜூன் 4ஆம் தேதி துவங்க உள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததையடுத்து தமிழகம் முழுவதும் பள்ளிகளை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமாரின் உத்தரவின்படி, திட்ட அலுவலர் திருமதி கவிதா, வழிகாட்டுதலின்படி பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பள்ளிகளில் பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உமா சங்கர் மேற்பார்வையில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இன்று குண்டியால்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கழிவறை, வளாகம், மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. மேலும் பழைய பழுதடைந்த கட்டடங்களை மீண்டும் புதுப்பிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இதனை பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர் மற்றும் சமூக நுகர்வோர் சங்க மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன், ஆகியோர் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்கள். அப்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜன், ஒப்பத்தவாடி ஊராட்சி செயலாளர் ஆனந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.



