நாகர்கோவில், மே 30 –
கன்னியாகுமரி மாவட்டத்தின் கலெக்டராக அழகு மீனா கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 21ம் தேதி பொறுப்பேற்றார். தற்போது அவர் சென்னையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை துணைச் செயலாளராக பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த பிரதாப் குமரி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட உள்ளார்.
பிரதாப் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு என்ற கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். தந்தை முருகன் விவசாயி. தாயார் முல்லைக்கொடி தனது குடும்பத்திலே முதல் பட்டதாரி மற்றும் முதல் அரசு அதிகாரி என்ற பெருமையை பெற்றவர்.
பிரதாப் சிறுவயது முதலே மாவட்ட ஆட்சியராக மாற வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்து வந்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்த இவர் 2017ம் ஆண்டு தனது முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். அந்த ஆண்டில் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
2017-18 காலகட்டத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பயிற்சி அதிகாரியாகவும், பின்னர் திருவண்ணாமலையில் துணை ஆட்சியராகவும் பணியை தொடங்கினார். ஒன்றிய அரசின் கிராமப்புற மேம்பாட்டு துறையிலும் பணியாற்றியவர். 2019 தர்மபுரி மாவட்டம் அரூர் துணை ஆட்சியராக பணியாற்ற போது ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோருக்கு பட்டா வழங்கியது மற்றும் மலை கிராமங்களுக்கும் மின் இணைப்பு வழங்கியது மக்களிடையே அவருக்கு நற்பெயரை பெற்று தந்துள்ளது.
திருவண்ணாமலையில் கூடுதல் ஆட்சியராக பணியாற்றிய போது ஒரே மாதத்தில் ஆயிரம் குளங்களை வெட்டுவதற்கான ஆணையைப் பெற்று, அதனை சாதித்தும் காட்டினார். இந்த அபார சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றதுடன், தமிழக முதலமைச்சரின் விருதையும் இவருக்கு பெற்று தந்தது.
2022ல் கோவை மாநகராட்சி ஆணையராக ஸ்மார்ட் சிட்டி திட்ட மேலாளராகவும் பொறுப்பேற்ற பிரதாப், வார்டு வாரியாக சென்று மக்கள் குறைகளை கேட்டு அறிந்தார். குறிப்பாக கோவையின் நீண்ட கால குடிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டதால் பொதுமக்களால் பெரிதும் பாராட்டப்பட்டவர்.
தொடர்ந்து 2025ம் ஆண்டு பிப்ரவரி 2 ம் தேதி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பணியில் சேர்ந்தார். குமரி மாவட்ட கலெக்டராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். குமரி மாவட்டத்தின் 54 வது கலெக்டராக வரும் 1ம் தேதி பிரதாப் பொறுப்பேற்க உள்ளதாக தெரிய வருகிறது.



