நாகர்கோவில், மே 27 –
நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தோட்டியோடு பகுதியில் இருந்து திங்கள் நகர் செல்லும் சாலை பிரதான சாலையாக திகழ்கிறது. இச்சாலை வழியாகவே திங்கள்நகர், இரணியல், தேங்காப்பட்டணம், கருங்கல், குளச்சல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் சென்று வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இச்சாலை மார்க்கமாக தினமும் சென்று வருகின்றன.
இச்சாலையில் நுள்ளி விளை பகுதியில் குறுக்கிடும் இருப்புப்பாதையில் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இங்கு ஏற்கனவே இருந்த குறுகிய பாலத்தை அகற்றி அதனை விரிவுபடுத்திடும் வகையில் புதிய பால கட்டுமானப்பணிக்கென இங்கிருந்த பாலம் இடிக்கப்பட்டது. இப்பால வேலைகள் நடைபெறுவதை ஒட்டி இச்சாலை வழியாக சென்றுவந்த பேருந்துகள் மற்றும் வாகனங்கள் இங்கு மாற்றுப்பாதை அமைக்கப்படாததால் மாற்றுவழித்தடத்தில் திருப்பிவிடப்பட்டு உள்ளது. தோட்டியோடு பகுதியில் இருந்து பரசேரி, நான்குவழிச்சாலை, பேயன் குழி, கண்டன்விளை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டு உள்ளது.
குறிப்பிட்ட பாலப்பணி தொடங்கி 6 மாத காலங்கள் ஆகிறது. பணிகள் 8 மாதத்தில் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட ரெயில்வே மேம்பாலப் பணிகள் முழுவீச்சில் இல்லாமல் மந்தகதியில் நடைபெற்று வருகின்றன. குறிப்பிட்ட இடத்தில் இருந்த பழைய பாலத்தின் தூண்களே இன்னும் அகற்றாத நிலையே உள்ளது. ஆமை வேகத்தில் நகரும் இப்பணிகளால் இச்சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். பள்ளி திறக்கப்பட உள்ள நிலையில் மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு கல்வி நிலையங்களுக்கு செல்ல இயலாததுடன் சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர். வாகனங்கள் சுற்றி செல்வதால் எரிபொருள் இழப்பு, காலதாமதம், வாகன பகுதிகள் தேய்வு உள்ளிட்டவற்றிற்கும் காரணமாகிறது.
எனவே முடங்கி உள்ள நுள்ளிவிளை ரெயில்வே பாலப்பணிகளை விரைந்து செயல்படுத்தி மக்கள் பாதிப்புகள் தொடர்வதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சமூக பொதுநல இயக்கம் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்து உள்ளது.



