ஈரோடு, மே 25 –
ஈரோட்டை சேர்ந்த சமூக நல ஆர்வலர் மற்றும் வழக்கறிஞரான செந்தில் குமார் தமிழக முதல்வர் விஜய்க்கு ஒரு மனு அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அணைகள் தமிழக விவசாய வளர்ச்சிக்கும் குடிநீர் பாதுகாப்புக்கும் மிகப்பெரிய ஆதாரமாக இருந்து வருகிறது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக புதிய பெரிய அணைகள் அமைப்பதில் போதிய முன்னேற்றம் இல்லாததால், தற்போது தமிழகத்தில் குடிநீர் மற்றும் விவசாய நீர்ப்பாசன தேவைகளுக்காக அண்டை மாநிலங்களை நம்ப வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
ஊட்டி, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் பல இயற்கை வளமிக்க இடங்களில் புதிய அணைகள் அமைக்க தகுந்த வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். எனவே, தமிழகத்தில் புதிய அணைகள் அமைக்க ஏற்ற இடங்களை ஆய்வு செய்ய உயர்மட்ட நீர்வள மற்றும் பொறியியல் நிபுணர் குழுவை அரசு உடனடியாக அமைக்க வேண்டும். தங்களின் ஆட்சி காலத்தில் குறைந்தபட்சம் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட புதிய அணைகள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இதன் மூலம் நிலத்தடி நீர் வளம் உயரும். விவசாய நீர்ப்பாசனம் மேம்படும். குடிநீர் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். மழைநீர் சேமிப்பு அதிகரிக்கும். தமிழகத்தின் நீர் வளம் நீண்டகாலத்திற்கு பாதுகாக்கப்படும்.
மேலும், டாஸ்மாக் மதுபான கொள்முதல் முறையில் முழுமையான வெளிப்படைத்தன்மை கொண்டு வர ஓப்பன் டெண்டர் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இதன் மூலம் அரசின் செலவுகள் குறைவதுடன், முறைகேடுகள் மற்றும் கள்ளச்சந்தை நடவடிக்கைகளும் குறையும். சேமிக்கப்படும் அரசுப் பணத்தை ஏழை மக்களின் கல்வி, மருத்துவம் மற்றும் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும். தமிழகத்தின் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் எதிர்கால பாதுகாப்பிற்கும் பயன்படும் இந்த கோரிக்கைகளை தாங்கள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.



