தஞ்சாவூர், மே 22 –
தென்மேற்கு பருவ மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 277 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கூறினார்.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தென் மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கி பேசியதாவது: கலெக்டர் அலுவலகம், அனைத்து வருவாய் கோட்ட அலுவலங்கள், தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும். மழையால் பாதிப்புகள் ஏற்படக்கூடிய 195 கிராமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 300 ஆப்தமித்ரா தன்னார்வலர்கள், 4500 முதல் நிலை பொறுப்பாளர்களும், ஒரு பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்திற்கு 50 முதல் நிலை பணியாளர்கள் வீதம் 14 பல்நோக்கு மையத்திற்கு 700 முதல் நிலை பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
பாதிப்புகள் ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு 277 நிவாரண மையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பருவமழையின் போது வெள்ள நீர் தேங்காதவாறு 10,418 சிறு பாலங்கள் மற்றும் 878 பாலங்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. ஆறுகள் மற்றும் கால்வாய்களில் ஏற்படும் உடைப்புகளை சரி செய்வதற்கு ஏதுவாக 534 இடங்களில் 1 லட்சத்து 210 மணல் முட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தியாகராஜன், நுகர்பொருள் வாணிபக் கழகம் முதுநிலை மண்டல மேலாளர் செல்வம், அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி இராமன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகனேஷ், வேளாண்மை இணை இயக்குனர் வித்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தவச்செல்வன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



