கிருஷ்ணகிரி, மே 11 –
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம், வீட்டுமனைப் பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி மற்றும் மின் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து 213 மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட மனுக்களில் தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்கவும், தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் தெரிவித்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,10,250 மதிப்பில் சக்கர நாற்காலிகள், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.19,000 மதிப்பில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சக்கர நாற்காலிகள் என மொத்தம் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 இலட்சத்து 29 ஆயிரத்து 250 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா ராணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவக்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமீர்பாஷா, மாற்றுத்திறனாளி நல அலுவலர் முருகேசன் மற்றும் அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



