தஞ்சாவூர், மே 11 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டப் பேரவை தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விருந்து அளிக்கப்பட்டது. இதில் கலந்து கொள்ள அழைப்பு இல்லாததால் அரசு வாகன டிரைவர்கள் விரக்தி அடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகளிலும்கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. இதையடுத்து வாகனங்களுக்கு பணம் மற்றும் பரிசுகள் வழங்குவதை தடுக்கும் வகையில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் உள்ளிட்ட 72 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனைகளில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி வாக்குப்பதிவும், கடந்த 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடைபெற்றன
இதையடுத்து தேர்தல் பணியில் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அரசு அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தஞ்சாவூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மதியம் சைவ மற்றும் அசைவ விருந்து அளிக்கப்பட்டது. இதில் 800 க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஆனால் தேர்தல் பணியில் அதிகாரிகளுக்கு வாகனங்களை இயக்கிய அரசு வாகன டிரைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாததால் அவர்கள் விரக்தி அடைந்தனர்.
இதுகுறித்து அரசு வாகன டிரைவர்கள் கூறுகையில்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் 150 வாகனங்கள் டிரைவர்கள் வேலைப்பணியில் ஈடுபட்டோம். அதிகாலை முதல் இரவு வரை அதிகாரிகளை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பணியாற்றினோம். தேர்தல் பணியாளர்கள் முதல் பறக்கும் படை அதிகாரிகள் வரை அனைவருக்கும் நாங்கள் வாகனங்களை ஓட்டினோம். தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்து, விருந்து அளிப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அந்த அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றிய எங்களை மரியாதைக்காக கூட அழைக்காதது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.


