தஞ்சாவூர், செப்டம்பர் 19 –
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில்நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் தேசிய ஒருமைப்பாடு முகாம் தொடக்க விழா நடைபெற்றது. இந்த முகாமிற்கு தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் சி. அமுதா தலைமை வகித்தார். முகாமை தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் முரசொலி தொடங்கி வைத்து பேசுகையில்: இளம் வயதிலேயே மாணவர்கள் தங்கள் உடலையும் உள்ளத்தையும் நேர்மையான வாழ்விற்குத் தகுதிபடுத்துவதற்காக தேசிய நாட்டு நலப்பணித்திட்டமானது பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் செயல்பட்டு வருகிறது என்றும் இத்திட்டத்தின் தேசிய அளவிலான இந்த முகாமில் பல்வேறு மொழி, பண்பாடுகளைச் சார்ந்த மாணவர்கள் தஞ்சை மண்ணுக்கு வருகை தந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தனது தொடக்கவுரையில் குறிப்பிட்டார்.
தேசிய நாட்டு நலப்பணித்திட்டத்தின் சென்னை மண்டல இயக்குநர் சாமுவெல் செல்லையா, மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் நித்யா, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கோ. பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக முகாமின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி. வீரமணி வரவேற்றுப் பேசினார். நிகழ்வின் நிறைவில் முனைவர் இரா. வெங்கடேசன் நன்றியுரை ஆற்றினார். தொடர்ந்து 7 நாள்களுக்கு நடைபெறவுள்ள முகாமில் தமிழகம் மட்டுமில்லாமல், மஹாராஷ்ட்ரா, உத்தரகாண்ட், ஒடிசா உள்ளிட்ட பிற இந்திய மாநிலங்களைச் சேர்ந்த 210 நாட்டு நலத்திட்ட மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. இந்த முகாம் செப்டம்பர் 24-ம் தேதி நிறைவடைகிறது.



