குளச்சல், ஜன. 20 –
குளச்சல் அருகே கோடிமுனையை சேர்ந்தவர் ஆன்டனி (43). நேற்று மாலை வீட்டை விட்டு வெளியே சென்றார். குழந்தைகள் இரண்டு பேரும் டியூசனுக்கு சென்றனர். கிரைண்டரில் மாவை போட்டு அரைத்துக் கொண்டு இருந்த அவரது மனைவி கிரைண்டரை ஆப் செய்யாமல் வீட்டை பூட்டிவிட்டு அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது திடீரென வீட்டில் புகை எழுந்துள்ளது. சந்தேகமடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் சமையல் அறையில் இருந்து பொருட்கள் தீப்பற்றி எரிவதை கண்டனர். இதை அடுத்து குளச்சல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வீட்டின் கதவை திறந்து மின்சாரத்தை நிறுத்தி பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
தீயணைத்த போதும் வீட்டின் சமையல் அறையில் இருந்த கிரைண்டர், மிக்ஸி, ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து நாசமானது. வீட்டில் உள்ள அறை முழுவதும் புகை மூட்டம் பரவிய நிலையில் வீட்டில் ஆள் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து குளச்சல் போலீசார் நடத்திய விசாரணையில் மாவு அரைக்கும் கிரைண்டரில் ஏற்பட்ட மின்கசிவு திடீர் தீ விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.


