தஞ்சாவூர், ஜூன் 9 –
வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது. தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கௌரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் தகுதி உடைய விவசாயிகள் முழுமையாக பயன்பெறவும் பல்வேறு காரணங்களால் தவணைத் தொகை நிறுத்தம் செய்யப்பட்ட பயனாளிகள் மீண்டும் திட்டத்தில் இணைந்து பயன் பெறவும் மாவட்ட முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
பிரதம மந்திரி கவுரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் வங்கி கணக்குடன், ஆதார் எண்ணை இணைக்காத 3,070 விவசாயிகள் மின்னணு கேஒய்சி பதிவு செய்யாத 1,174 விவசாயிகள், ஆதார் எண் மற்றும் மின்னணு கே.ஒய்.சி பதிவு செய்யாத 252 விவசாயிகள் தொடர்ந்து திட்டத்தின் பலனை பெற முடியாத நிலையில் உள்ளனர். தகுதி உடைய அனைத்து விவசாயிகளும் வட்டார அளவில் நடைபெறும் பிரதம மந்திரி கவுரவ நிதி உதவி திட்ட சிறப்பு முகாம்களில் பங்கேற்று தங்களின் ஆவணங்களில் உள்ள குறைபாடுகளை சரி செய்து திட்டத்தின் பயன்பெறலாம்.
இதற்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் வேளாண்மை துறை, தோட்டக் கலைத்துறை, வேளாண் வணிகத்துறை மற்றும் வருவாய் துறைகளுடன் இணைந்து நடைபெறும் முகாம்களில் விடுபட்ட விவரங்களை பதிவு மேற்கொள்ள வேண்டும்.
இந்த முகாம் 10, 12, 15 தேதிகளில் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் நடைபெறும். பிரதம மந்திரி கவுரவ நிதி உதவி திட்டத்தின் 23வது தவணை ஜூலை மாதத்தில் வழங்கப்பட உள்ள நிலையில், நில ஆவண விவரங்கள் புதுப்பித்தல் வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பு, மின்னணு கேஒய்சி பதிவு உள்ளிட்ட தகவல்களை சரி செய்ய வேண்டிய வேண்டியது அவசியம். இதன் மூலம் விடுவிக்கப்பட்ட தகுதியான விவசாயிகள் திட்டத்தின் புதிதாக தொடர்ந்து பயனடைய முடியும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.



