குளச்சல், மே 8 –
குளச்சல் அருகே கோணங்காடு பகுதியை சேர்ந்தவர் லுக்மானுல் ஹக்கீம் (48) மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் ஆதிலா (15) என்பவர் 9 ஆம் வகுப்பும், மகன் ஆசின் (10) 5ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்த இரண்டு பிள்ளைகளும் வீட்டருகே உள்ள ஆலிம் என்பவரது வீட்டிற்கு சென்று அரபி படித்து வருகின்றனர்.
நேற்று மாலை இருவரும் அரபி படித்து விட்டு வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் விபின் (42) என்பவர் பைக்கில் அதிக ஒலி எழுப்பி பிள்ளைகள் மீது பைக்கை மோதுவது போல் சென்று அச்சமூட்டி உள்ளார். உடனே ஆசின் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். உடனடியாக விபின் திட்டி ஆசின் கன்னத்தில் அறைந்து, பிள்ளைகளை துரத்தி உள்ளார்.
இந்த தகவல் அறிந்த தந்தை லுக்மானுல் ஹக்கீம் உடனடியாக விபினிடம் சென்று விசாரித்துள்ளார். அவரையும் விபின் திட்டி மிரட்டி உள்ளார். தாக்குதலில் காயம் அடைந்த மாணவன் ஆசின் குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விபினை கைது செய்தனர்.


