தஞ்சாவூர், மே 2 –
தஞ்சாவூர் மாவட்டம் திட்டை வசிஸ்டேஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா வருகிற மே 26ம் தேதி நடக்கிறது. தஞ்சாவூர் அடுத்துள்ள திட்டை யில் வசிஷ்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மூலவர் சன்னதியின் விமானத்தில் சந்திர காந்தக் கல், சூரிய காந்தக் கல் வைத்து கட்டப்பட்டுள்ளது. இந்த கற்கள் காட்டிலிருந்து ஈர பதத்தை தம்முள் ஈர்த்து வேதிவினை ஏற்பட்டு 24 நிமிடங்களுக்கு ஒரு சொட்டு நீரை சுவாமி மீது சொட்டுகின்றது. இத்தகைய அமைப்பு வேறு எந்த சிவன் கோவிலிலும் காண முடியாது.
இங்கு இறைவன் தானாக தோன்றியதால் தான் தோன்றீஸ்வரர் எனவும், வசிஷ்டர் இங்கு வந்து தவம் புரிந்து பிரம்ம ஞானிகளின் தலைசிறந்தவர் ஆனதால், இத்திருத்தலம் இறைவன் வசிஷ்டேஸ்வரர் எனும் எனவும் அழைக்கப்படுகிறார். நவகிரகங்களில் மகத்தான சுப பலன் பெற்றவர் குருபகவான் ஒருவரது ஜாதகத்தில் மிகக் கடுமையான பாவ கிரகங்களால் ஏற்படக்கூடிய விளைவுகளை கூட தனது பார்வை பலத்தினால் கட்டுப்படுத்தும் சக்தி குரு பகவானுக்கு உண்டு.
எல்லா சிவன் கோயில்களிலும் தென் கோஷ்டத்தில் சிவபெருமானின் ஞான வடிவமான தட்சணா மூர்த்தியையே குருவாக பாவித்து வழி விடுகிறார்கள். ஆனால் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் நவகிரக குரு பகவானே சுவாமிக்கும், அம்பாளுக்கும், இடையில் தனி சன்னதியில் தனி விமானத்துடன் ராஜ குருவாக நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவது வழக்கம். இதனால் அவரவர் ராசிக்கு ஏற்ப பலன் ஏற்படும்.
இந்த ஆண்டுக்கான குரு பெயர்ச்சி விழா வருகிற மே 26ம் தேதி செவ்வாய்க்கிழமை நடக்கிறது. அன்றைய தினம் காலை 11 மணிக்கு குருபகவான் மிதுன ராசியிலிருந்து, கடக ராசிக்கு பிரவேசிக்க இருக்கிறார். குரு பெயர்ச்சி அடுத்த மாதம் ஜூன் 3ம் தேதி லட்சார்ச்சனையும், 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை 3 நாட்கள் சிறப்பு பரிகார ஹோமமும் நடக்கிறது.
குரு பெயர்ச்சியையொட்டி திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடப்பட்டது. இதில் கோவில் செயல் அலுவலர் அசோக்குமார், கிராம முக்கியஸ்தர்கள் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



