நாகர்கோவில், ஏப். 28 –
தாழக்குடி அருகே தோப்பூர் கனகமூலம் குடியிருப்பு பகுதி சேர்ந்தவர் பலவேசமுத்து (72). விவசாயி. இவர் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். இவருக்கு அதே போதையை சேர்ந்த தேங்காய் வெட்டும் தொழிலாளி செல்வகுமார் (57) என்பவருக்கும் நிலம் குத்தகை எடுப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. அடிக்கடி இருவர்களிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.மேலும் செல்வகுமார் பலவேசமுத்துவை பார்க்கும் இடங்களில் எல்லாம் வெட்டி கொலை செய்து விடுவதாக தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை கனகம் மூலம் குடியிருப்பு சந்திப்பில் செல்வகுமார் நின்று கொண்டு இருந்தார். அந்த வழியாக பலவேசமுத்து வந்தார். அப்போது அவர் பலவேசமுத்துவை பார்த்து தகாத வார்த்தைகள் பேசி தாக்கி உள்ளார். அக்கம் பக்கத்தினர் இருவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இதை அறிந்த பலவேசமுத்துவின் மூத்த மகன் லிங்கம் தந்தைக்கு நடந்ததை கேள்விப்பட்டதும் செல்வகுமார் வீட்டிற்கு தந்தையை அழைத்து சென்றுள்ளார். இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது ஆத்திரமடைந்த செல்வகுமார் வீட்டிலிருந்த தேங்காய் வெட்டும் அரிவாளை எடுத்து பலவேசமுத்துவின் வயிற்றில் வெட்டினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து ஆரல்வாய்மொழி போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, செல்வகுமாரை இன்று கைது செய்தனர்.


