மார்த்தாண்டம், ஏப். 28 –
கடையாலுமூடு சீறோ பாயிண்ட் பகுதியில் உள்ள சோதனை சாவடி அருகே நீர்வளத் துறைக்கு சொந்தமான நிலம் உள்ளது. அங்கு நேற்று இரவு திடீரென ஒரு பகுதியில் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதை அந்த வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்தவர்கள் உடனே பார்த்தனர். அப்போது அங்கிருந்து காப்பாற்றுங்கள் என்று அலறும் சத்தம் கேட்டுள்ளது. புதர்களுக்கு இடையே இருளான பகுதியில் சத்தம் கேட்டதால் இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சென்று பார்த்தபோது அங்கு உடலில் ஒருவர் தீப்பற்றி எரிந்த நிலையில் கிடந்தார்.
பொதுமக்கள் அவரை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் கடையாலுமூடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அந்த நபர் தீக்குளித்து தெரிய வந்தது.
மேலும் அவரது பெயர் சசிதரன் என்பதும், கேரளா மாநிலம் நெடுமங்காடு பகுதியை சேர்ந்தவர் என்பதும், மேலும் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு உதவி தொகை பெற்று வாழ்கை நடத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த சசிதரன் இன்று காலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இது குறித்து கடையாலுமூடு போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


