ஈரோடு, ஏப். 25 –
ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரியுமான கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு (கிழக்கு), ஈரோடு (மேற்கு), மொடக்குறிச்சி. பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம் மற்றும் பவானிசாகர் (தனி) ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மொத்தம் உள்ள 2379 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. இதில் 90.10% வாக்குகள் பதிவாகியுள்ளன.
வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு வாக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினைச் சரிபார்க்கும் கருவிகள் ஆகியவை போட்டியிடும் வேட்பாளர்கள் அவர்களின் பிரதிநிதிகள் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட மத்தியப் பார்வையாளர்கள் முன்னிலையில் காணொலி காட்சிப் பதிவு செய்யப்பட்டு, இந்தியத் தேர்தல் ஆணையத்தால் குறிப்பிடப்பட்ட இருப்பு மற்றும் பாதுகாப்பு நெறிமுறையின்படிஈரோடு (கிழக்கு), ஈரோடு (மேற்கு), மொடக்குறிச்சி, பெருந்துறை. பவானி மற்றும் அந்தியூர் ஆகிய தொகுதிகளுக்கு ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி ஐ ஆர் டி டி யிலும், கோபிசெட்டிபாளையம் மற்றும் பவானிசாகர் (தனி) ஆகிய தொகுதிகளுக்கு கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் உள்ள இருப்பு காப்பறையில் வைக்கப்பட்டுள்ளது.
காப்பறைக்கு ஆயுதம் தாங்கிய இரண்டு அடுக்கு பாதுகாப்புடன் ஆயுதம் தாங்கிய பாதுகாப்புப் படைப் பிரிவு 24 நேரமும் கண்காணிப்புக் கேமராவின் கீழ் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும், காப்பறையின் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்காணிப்பதற்காக தங்களின் பிரதிநிதிகளை நியமிப்பது குறித்தும், வெளியே மேலும் அவர்களைப் பாதுகாப்பு வளையத்தின் உட்பகுதிக்கு அனுமதிக்கப்படுவது குறித்தும் எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பொறியியல் கல்லூரி ஈரோடு மற்றும் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோபிசெட்டிபாளைம் ஆகிய இடங்களில் உள்ள காப்பறையின் கண்காணிப்புக் கேமரா மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணுக்கை நாளன்று, போட்டியிடும் வேட்பாளர்கள் அவர்களின் பிரதிநிதிகள் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பார்வையாளர்கள் முன்னிலையில் காணொலிப் பதிவின் கீழ் இந்த காப்பறை மத்தியப் திறக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


