மதுரை, ஜூலை 20 –
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே காயம்பட்டி கிராமத்தில் அதிகாலை வாக்குவாதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் முதியவர் ஒருவர் காயமடைந்தார். இது தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இன்று அதிகாலை சுமார் 3.00 மணியளவில் பட்டியலின இளைஞர்கள் இருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, மாற்று சமுதாய இளைஞர்கள் மூன்று பேர் அவர்களை அச்சுறுத்தியுள்ளனர். பின்னர் தொடர்ந்து சென்று தாக்க முற்பட்ட போது, அங்கு படுத்திருந்த முதியவரான சுப்பன் என்பவரை ஆயுதத்தால் தாக்கியதில் தலையில் காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அப்பகுதியில் உள்ள 4 வீடுகளின் ஓடுகளை சேதப்படுத்திவிட்டு குற்றவாளிகள் தப்பியோடியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு மதுரை சரக காவல் துறை துணைத்தலைவர் அபினவ் குமார் மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட காயம்பட்டி காலனி பகுதியை சேர்ந்த ராமர், லட்சுமன் மற்றும் பிரவீன் ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக போலீஸார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது போன்ற ஜாதி ரீதியான மோதலில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்படுவார்கள் என்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் எச்சரித்துள்ளார்.



