திருச்சி, ஏப். 23 –
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் களமாடுவது பிற அரசியல் கட்சியினரை பதபதைக்க வைத்துள்ளது. திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டால் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பதாய் விஜய் தனது முதல் பிரச்சாரத்தை கடந்தாண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி திருச்சியில் தொடங்கினார். அடுத்தடுத்து பல்வேறு பயணித்திட்டங்களுக்கு வழிவகுத்த போது கரூர் சம்பவம் பெரும் முட்டுக்கட்டையை ஏற்படுத்தியது.
பின்னர் சட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் கடந்த ஏப்ரல் 2 -ம் தேதி விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்து அன்றே பிரச்சாரம் செய்தார். பின்னர் மீண்டும் கடந்த 19ஆம் தேதி திருச்சி கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்தார். விஜய் மூன்று முறை திருச்சி கிழக்கு தொகுதியில் வலம் வந்ததால் திருச்சியில் விஜய்க்கு பெரிய மாஸ் உருவானது.
இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கியது. வாக்குப்பதிவு துவங்கிய நேரம் முதல் சற்று முன்பு வரை திருச்சி கிழக்குத் தொகுதியில் பதிவாகும் வாக்குகள் மாநிலத்தின் கவனத்தை ஈர்த்துள்ளன.
திருச்சி கிழக்குத் தொகுதியில் உள்ள பல வாக்குச்சாவடிகளில் தவெக தலைவர் விஜய் தனது பிரசாரங்களின்போது அணியும் அதே பாணியிலான வெள்ளைச் சட்டை மற்றும் காக்கி பேண்ட் அணிந்து நூற்றுக்கணக்கான தொண்டர்கள் வாக்குச்சாவடிகளுக்குத் திரண்டனர்.
ஆண்கள் மட்டுமின்றி, ஏராளமான பெண்களும் இதே போன்ற உடை அலங்காரத்தில் வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். இது தவெக-வின் ‘விசில்’ சின்னத்திற்கான ஒரு மௌனமான மற்றும் வலுவான ஆதரவுப் பிரசாரமாகவே அங்குப் பார்க்கப்பட்டது.
காலை 11 மணி நிலவரப்படி திருச்சி கிழக்குத் தொகுதியில் 37.03% வாக்குகள் பதிவாகியிருந்தன. 1 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 56.81% பதிவாகியுள்ள நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் 79.32 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
மதிய வெயிலையும் பொருட்படுத்தாமல் விறுவிறுப்பாக வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்து வாக்கு சதவீதத்தை வரலாற்று சாதனையாக உயர்த்தி வருகின்றனர். மொத்தத்தில் திருச்சி மாவட்டம் முழுவதிலும் 82 சதவீதத்திற்கும் மேலான வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்துள்ளது வரலாற்று சாதனையாக அமைகிறது. மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடுகிறார் என்பதால், திருச்சி கிழக்கில் மட்டும் கூடுதல் சிசிடிவி கண்காணிப்பு மற்றும் காவல்துறை ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.



