நாகர்கோவில், ஏப். 3 –
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் அழகுமீனா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அவர் கூறுகையில்: நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் எவ்வித சிரமமுமின்றி தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்பதை உறுதிப்படுத்த, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மத்திக்கோடு வடக்கன்கரை அரசு தொடக்கப்பள்ளி, பூட்டேற்றி அரசு தொடக்கப்பள்ளி, கீழ்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, புதுக்கடை முக்காடு அரசு நடுநிலைப்பள்ளி, கொல்லங்கோடு வள்ளவிளை அரசு தொடக்கப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் 24 மணி நேர மின்சார வசதி, அதிக ஒளியூட்டும் மின்விளக்கு வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுத்தளம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஆண், பெண் இரு பாலருக்கு தனித்தனி கழிப்பறைகள் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளதா என அந்தந்த சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத்தொடர்ந்து கீழ்குளம் முதல்நிலை பேரூராட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவினை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியினை கலெக்டர் அழகு மீனா துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் தலைமையாசிரியர்கள், அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



