கன்னியாகுமரி, ஜூலை 23 –
தமிழக கடலோர பகுதியில் உள்ள மாவட்டங்களில் கடல் வழியாக படகு மூலம் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க ஆண்டுதோறும் கடலில் படகு மூலம் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை நடத்துவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு போலீசார் இந்திய கடலோர காவல் படை இந்திய கடற்படை மீன்வளத்துறை மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து நேற்று முதல் தமிழகத்தின் கடலோர பகுதியில் “சாகர்கவாச் ஆபரேஷன்”என்ற பாதுகாப்பு ஒத்திகையை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ்நாடு கடலோர மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், நாகை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடிஉள்பட 13 கடலோரமாவட்டங்களில் இந்திய கப்பல் படை தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீசார் இந்திய கடலோர காவல் படை மீன்வளத்துறை மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து கடல் பகுதியில் “சாகர் கவாச் ஆப்ரேஷன்” என்ற பாதுகாப்பு ஒத்திகையை இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் நடத்தி வருகிறார்கள். இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணி வரை தொடர்ந்து நடக்கிறது. இந்த பாதுகாப்பு ஒத்திகையில் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இது தவிர இந்திய கடலோர காவல் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நெல்லை, குமரி மாவட்டத்தில் உள்ள கடல் பகுதியில் அதிநவீன ரோந்து படகு மூலம் இன்று காலை 6 மணி முதல் பாதுகாப்பு ஒத்திகை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி அருகே உள்ள ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடல் பகுதியில் படகு மூலம் சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பாதுகாப்பு ஒத்திகை தொடர்ந்து நடந்து வருகிறது. 106 கிலோ மீட்டர் தூரம் உள்ள 48 கடற்கரை கிராமங்களிலும் வாகனங்களில் ரோந்து சென்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். 10க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகளில் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.



