கன்னியாகுமரி, டிச. 13 –
கன்னியாகுமரி அருகே பூஜப்புரை விளை பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (54) ஒப்பந்ததாரர். தென்தாமரை குளம் பகுதி சேர்ந்தவர் அப்ரின் ஸ்டாலின் (24). இவர் ஹிட்டாச்சி உரிமையாளர். இவரிடம் ஹிட்டாச்சி டிரைவராக நாங்குநேரி பகுதி பேரின்பராஜ் (30) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள ஒரு கல்லூரி மைதானத்தில் கற்களை அகற்றும் பணியில் செல்வகுமார் ஈடுபட்டிருந்தார். இதற்காக அப்ரின் ஸ்டாலினிடம் ஹிட்டாச்சி வாடகைக்கு எடுத்திருந்தார். பேரின்பராஜ் அதை ஓட்டினார். வேலைக்கு இடையே பேரின்பராஜ் தூங்கியதாக கூறப்படுகிறது. இதை செல்வகுமார் அப்ரின் ஸ்டாலினிடம் தட்டி கேட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்ரின் ஸ்டாலின் தகராறில் ஈடுபட்டார். அப்போது சத்தம் கேட்டு எழுந்த பேரின்பராஜ் தகாத வார்த்தை பேசி வாகனத்தில் இருந்த கம்பி எடுத்து செல்வகுமாரை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின் பேரில் தென் தாமரைக்குளம் போலீசார் பேரின்பராஜ் மற்றும் அப்ரின் ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


