வேலூர், ஜூலை 16 –
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஒருவர், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகளை கொரியர் மூலம் பெற்றுக்கொண்டபோது போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட வாலிபர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த பவன் தூபே (23) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு பி.டெக் (தகவல் தொழில்நுட்பம் – IT) படித்து முடித்துள்ளார். இவருக்கு சில பாடங்களில் அரியர்ஸ் இருந்ததால் அவற்றை எழுதி தேர்ச்சி பெறுவதற்காக கடந்த மாதம் காட்பாடிக்கு வந்துள்ளார். இதற்காக கடந்த ஜூன் மாதம் முதல் காட்பாடியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தனது நண்பருடன் அறை எடுத்து தங்கி, தேர்வு எழுதி வந்துள்ளார்.
இந்நிலையில், பவன் தூபேயுடன் தங்கியிருந்த அவரது நண்பர் அண்மையில் டெல்லிக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 100 வலி நிவாரணி மாத்திரைகளைபார்சல் மூலம் காட்பாடியில் உள்ள டி.டி.சி (DTC) கொரியர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளார். இந்த மாத்திரைகளின் மொத்த மதிப்பு ₹427 எனத் தெரியவந்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் அருகே உள்ள கொரியர் சேவை அலுவலகத்திற்கு அந்த பார்சலை வாங்குவதற்காக பவன் தூபே சென்றுள்ளார். அப்போது ரகசிய தகவலின் பேரில் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் தடை செய்யப்பட்ட மாத்திரைகளை வாங்கிய பவன் தூபேயை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்த 100 மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட பவன் தூபே ஒரு முன்னாள் மாணவர் என்பதாலும் அவரது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும் பிரம்மபுரம் போலீசார் அவரை காவல் நிலைய நிபந்தனை ஜாமீனில் விடுவித்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து மாத்திரைகளை அனுப்பிய அவரது நண்பர் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



