மார்த்தாண்டம், ஏப். 13 –
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி 300 பூத்துகளில் கிளை பொறுப்பாளர்கள் முதல் தேசிய அளவிலான பொறுப்பாளர்கள் சுமார் 5 ஆயிரம் பேர் வீடு வீடாக சென்று பாஜக வேட்பாளர் விஜயதரணிக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.
நட்டாலம், கோயில் வட்டம் உட்பட தொகுதியின் பல்வேறு பகுதிகளில் பாஜக வேட்பாளர் விஜயதரணி வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தொகுதி மக்கள் பொன்னாடை போர்த்தியும் திலகம் கொடுத்தும் வேட்பாளர் விஜயதரணியை வரவேற்றனர். தொடர்ந்து வீடு வீடாக சென்று தாமரை சின்னத்தை காண்பித்து தனக்கு ஆதரவை சேகரித்தார். தொடர்ந்து சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை வேட்பாளரை கட்டி தழுவி பல கோரிக்கைகளை முன் வைத்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த வேட்பாளர் விஜயதரணி கூறியதாவது: சட்டமன்ற தேர்தலில் பணியில் இருக்கும் தனியார் வாகன ஓட்டுநர்கள் மற்றும் தனியார் பங்களிப்பு பணியாளர்கள் பல ஆண்டுகளாக தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற முடியாமல் உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கும் தபால் வாக்குகள் அளிக்கவோ அல்லது புதிய வழிமுறையை கண்டுபிடித்து வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
மேலும் முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு வீடு வீடாக சென்று நடைபெற்று வரும் வாக்களிப்பு தொய்வு நிலையில் நடைபெற்றதாகவும், இந்த பணியில் அனைத்திலும் தொய்வு இருப்பதை பார்க்க முடிகிறது. ஆகவே தேர்தல் ஆணையம் இதற்கு கவனம் செலுத்த வேண்டும். இதனால் ஏற்பட்டுள்ள இடையூறுகளை தவிற்க்க தபால் வாக்களிப்பை ஓரிரு நாட்கள் நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அப்படி நடந்தால் மட்டுமே வெளிப்படை தன்மையோடு இந்த தேர்தல் நடக்கும். அதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்.



