நாகர்கோவில், ஏப். 13 –
கன்னியாகுமரி மாவட்ட த்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று வாக்கு பதிவு மேற்கொள்ளும் பணி நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக குளச்சல் சட்டமன்றத்திற்குட்பட்ட உடையார்விளை பகுதியில் வசிக்கும் 65 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளி கோமதி என்பவரும், நாகர்கோவில் சட்டமன்றத்திற்குட்பட்ட பெருவிளை பகுதியில் வசிக்கும் 40 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளி சிவசங்கரன் என்பவரும் வாக்குப்பதிவு செலுத்துவதை மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேரில் பார்வையிட்டார்.
இந்த தபால் வாக்குப்பதிவானது நேற்று துங்கி இன்று (13.04.2026) மற்றும் நாளை 14.04.2026 வரை நடைபெறும். நடைபெற்ற ஆய்வில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, கல்குளம் வட்டாட்சியர் சுனில், தனி வட்டாட்சியர் சேகர், துறை அலுவலர்கள், தேர்தல் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



