நாகர்கோவில், ஏப். 9 –
வரும் 23ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிப்பது குறித்து, பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பில் ஆரல்வாய்மொழி புனித ஜோசப் சட்டக்கல்லூரி மற்றும் டி.எம்.ஐ பொறியியல் கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் என் பெருமை என் விரல் மை, “உங்கள் வாக்கு – உங்கள் உரிமை, நேர்மையாக வாக்களிப்போம் – ஜனநாயகத்தைக் காப்போம், விலைமதிப்பற்றது நம் வாக்கு, உன் ஓட்டு உன் குரல், சிறிய மை பெரிய மாற்றம், உன் ஒட்டு உன் குரல் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினர்.
நகரின் முக்கிய சந்திப்புகளைக் கடந்து சென்ற இந்தப் பேரணி, அண்ணா பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. நடைபெற்ற பேரணியில் சுமார் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா அருட்பணியாளர்கள் ஜோசப், போஸ்கோ, பேராசிரியர்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி மாணவ மாணவியர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.



