தஞ்சாவூர், ஏப்ரல் 6 –
தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடிகளை தயார்படுத்தும் பணி ஒருபுறம் தீவிரமாக நடந்து வருகிறது. அதே நேரத்தில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பணம் பொருள்கள் விநியோகம் செய்தல் போன்ற முறைகேடுகளை தடுக்க தேர்தல் ஆணையம் முனைப்பு காட்டி வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கான பணம் பரிசுப்பொருள் வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இவர்கள் வாகன சோதனை தீவிரமாக நடத்தி வருகிறார்கள்.
ரூபாய் 50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் சென்றாலோ, உரிய ஆவணங்கள் இன்றி அதிக அளவில் நகை, பரிசு பொருட்களை எடுத்துச் சென்றாலோ, அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் வாகன சோதனையில் ஈடுபடும் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினையும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவின் வாகனங்கள் ஜி.பி.எஸ். மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து இந்த கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.



