தென்காசி, நவம்பர் 5 –
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் இரட்டை குளம் – ஊத்துமலை பெரியகுளம் இணைப்பு கால்வாய் திட்டத்துக்கு நிலத்தை கையகப்படுத்தி தந்து தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தால் சொந்த நிதியில் அத்திட்டத்தை நிறைவேற்ற தயார் என்று பழனி நாடார் எம்எல்ஏ அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: தென்காசி சட்டப்பேரவை தொகுதி வீரகேரளம்புதூர் வட்டம் இரட்டை குளம் – ஊத்துமலை பெரியகுளம் வரையிலான ஆலடிப்பட்டி, கண்டையன் குளம், கீழச் சுரண்டை குட்டை குளம், புலி முகத்துவராயன் குளம், தொண்டையான் பட்டி குளம், வாடியூர், மரியதாய்புரம், பரங்குன்றாபுரம், லெட்சுமிபுரம், அச்சங்குன்றம், கருவந்தா, கரையாளனூர், குறிச்சான் பட்டி, குறுந்தன் மொழி, அருணாச்சலப்பேரிக்குளம், இரதமுடையார் குளம், சோலைசேரி, ஊத்துமலை வடக்கு காவலாகுறிச்சி, வென்றி லிங்கபுரம், காவலா குறிச்சி, எந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் 30 கிராமங்களில் வாழும் பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
இந்தப் பகுதி முழுவதும் வானம் பார்த்த பூமியாகும். மழை பெய்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும். எனவே இரட்டைக் குளத்தில் இருந்து ஊத்துமலை பெரிய குளத்தை இணைக்கும் புதிய கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால் மேற்குரிய கிராமங்களை சேர்ந்த 7500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் நிலத்தை நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்சனை தீரும் கால்நடைகள் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும். 18 குளங்களும் 30 கிராமங்களும் பயன்படும். இது அப்பகுதி மக்களின் 63 ஆண்டுகளாக உள்ள கோரிக்கையாகும்.
தமிழக முதல்வர் 2021 சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆலங்குளத்தில் தேர்தல் பரப்புரையில் இரட்டைக் குளம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார். இத்திட்டத்திற்கு 2021-22 ஆம் நிதி ஆண்டின் நீர்வளத் துறை மானிய கோரிக்கையில் ரூ 52.40 கோடிக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் நிர்வாகம் ஒப்புதலுக்கு 21.10.21 இல் அனுப்பப்பட்டது. ஆனால் இத்திட்டம் கைவிடப்பட்டதாக கூறி 2022 ல் திருப்பி அனுப்பப்பட்டது. எனவே உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் இத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அரசிடம் மனு அளித்தேன்.
இதை அடுத்து 2023 – 24 ஆம் ஆண்டில் மறு மதிப்பீடு செய்யப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் இரட்டை குளம் கால்வாய் திட்டம் இடம் பெறாததால் மக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இத்திட்டத்தை நிறைவேற்ற 97.17 ஏக்கர் நிலம் தேவை. அது அரசு கையகப்படுத்தி மீதமுள்ள பணியை நிறைவேற்ற அனுமதி அளித்தால் எனது சொந்த நிதியில் இந்த திட்டத்தை நிறைவேற்றித் தர தயாராக உள்ளேன் என்று பத்திரிகையாளர்களிடம் பழனி நாடார் எம்எல்ஏ தெரிவித்தார்.



