நாகர்கோவில், மார்ச் 26 –
குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா இன்று (26.03.2026) காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் முன்னிலையில் கன்னியாகுமரி-கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள களியாக்காவிளை மற்றும் கோழிவிளை சோதனை சாவடிகள் மற்றும் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து கலெக்டர் கூறியதாவது: கன்னியாகுமரி – கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள களியக்காவிளை மற்றும் கோழிவிளை சோதனைச் சாவடிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு வாகன சோதனைகள் முறையாக நடைபெறுகிறதா என்பதையும், சோதனை சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் சோதனையின் போது பறிமுதல் செய்யப்படும் பொருட்கள் குறித்த தகவல் பதிவேடுகள் சரிபார்க்கப்பட்டதோடு, வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் தகுந்த ஆவணமில்லாமல் கொண்டு செல்லும் பொருட்கள் குறித்தும், பணங்கள் குறித்தும் தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ்குளம் பரவை லுத்தரன் தொடக்கப்பள்ளி, இராமன்துறை புனித ஜோசப் நடுநிலைப்பள்ளி, தூத்தூர் பயஸ் லவன் மேல்நிலைப்பள்ளி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட களியாக்காவிளை அரசு முஸ்லீம் தொடக்கப்பள்ள ஆகிய பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு கூறினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுகிதா, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் செந்தூர் ராஜன், வட்டாட்சியர்கள் ஜெகதா (கிள்ளியூர்), வயோலா பாய் (விளவங்கோடு), உசூர் மேலாளர் தாஜீ நிஷா, துறை அலுவலர்கள், காவல்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



