ஈரோடு, மார்ச் 19 –
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தலைமையில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு “வாக்களிப்பது உங்கள் உரிமை மற்றும் கடமை” என்ற வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசும்போது தெரிவித்ததாவது: தேர்தலில் பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய தினம். வேளாண்மைத்துறையின் சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக நம்முடைய நாட்டில் தேர்தலை நியாயமாகவும் நேர்மையாக நடத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் இருக்கின்ற 8 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வாக்காளர்களும் தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் பெற்றுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மேலும், 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு மற்றும் 40 சதவீதம், மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களுடைய இல்லத்திற்கே சென்று தேர்தல் அலுவலர்கள் வாக்குப்பதிவு செய்வதற்கு தபால் வாக்கு வாக்குமுறையினையும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும், 23.04.2026 அன்று சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக இடம் அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படவுள்ளது. நியாயமான சுதந்திரமான எந்த விதமான தூண்டுதலும் இல்லாத ஒரு தேர்தலை நாம் நடத்துவதற்கு மக்களாட்சி முறையை நம்முடைய நாட்டில் நிறுவுவதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து தேர்தல் தேதியை நினைவூட்டும் வகையில் 23.04.2026 என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியும், விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் ஈரோடு மாநகராட்சி சம்பத்நகர் உழவர் சந்தையில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்திடும் வகையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காய்கறிகள் கொண்டு 100% வாக்களிப்போம் வாசகத்துடன் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி கோலங்களை கலெக்டர் கந்தசாமி பார்வையிட்டார்.
மேலும் அவர் 100% வாக்குப்பதிவை வலியுறுத்திடும் வகையில் நடைபெற்ற விழப்புணர்வு நிகழ்ச்சியில் அமைக்கப்பட்டிருந்த செல்பி பாயிண்டில் புகைப்படம் எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து. உழவர் சந்தைக்கு வந்திருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் தேர்தல் தொடர்பான துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



