தருமபுரி, மார்ச் 17 –
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காடு செட்டிப்பட்டி, மாரண்டஅள்ளி, கொலசனஅள்ளி சோதனை சாவடிகளில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் அசோக்குமார் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார்களை நிறுத்தி அவர்கள் சோதனையில் செய்தனர்.
அதில் பாப்பாரப்பட்டி சேர்ந்த பழனி, அரூரை சேர்ந்த ரூபா, அஞ்செட்டி நாராயணசாமி, பரமசிவம் ஆகியோர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2 லட்சத்து 51 ஆயிரத்து 60 மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொண்டு சென்றது தெரியவந்தது. இதை அடுத்து அதிகாரிகள் பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
காடு செட்டிப்பட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட அப்போது அந்த வழியாக வந்த காரின் சோதனை செய்தனர். காரில் வந்தவர் கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள அளேசீபம் பகுதியைச் சேர்ந்த சிக்கன் கடை உரிமையாளர் சர்தார் என்பதும் நிலத்தை விற்று வீடு வாங்குவதற்காக ரூ. 35 லட்சத்தை காரில் பாலக்கோட்டில் உள்ள மாமனார் வீட்டிற்கு கொண்டு வந்ததும் தெரிந்தது. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது போன்று பாலக்கோடு பகுதியில் வாகன சோதனையில் காரில் ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த 1 லட்சத்து 8,500 ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பாலக்கோடு தொகுதியில் மூன்று இடங்களிலும் வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 38 லட்சத்து 59 ஆயிரத்து 560 பறக்கும் படையினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.



